உத்திரபிரதேசத்தில் இரண்டு தலித் சிறுமிகள் கொலை செய்யப்பட்டு குளத்தில் வீசப்பட்டிருப்பது மீண்டும் மக்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
உத்திரபிரதேச மாநிலம் அசோதர் கிராமத்தில் திலிப் டோபி என்பவரின் மகள்கள் சுமி (வயது 12), கிரண் (வயது 8) இருவரும் காய்கறிகள் பறிக்க வயல் பகுதிக்கு சென்றிருக்கின்றனர். நீண்ட நேரம் ஆகியும் வீடு திரும்பாத நிலையில் சந்தேகமடைந்த பெற்றோர்கள், அருகில் உள்ள காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளனர். இந்நிலையில், அந்த கிராமத்திற்கு அருகே உள்ள ஃபதேபூரி குளத்தில் இரண்டு சடலங்கள் இருப்பதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்துள்ளது. விரைந்த காவல்துறையினர் இரு சடலங்களை மீட்டதில் இரு சடலங்களும் திலிப் டோபியின் மகள்கள் என தெரியவந்தது.
சடலங்களில் கண்களில் கடுமையான காயம் இருந்துள்ளது. சிறுமிகளை பாலியல் வன்புணர்வு செய்ய முயற்சித்து தாக்கி இருவரையும் கொலை செய்துள்ளனர் என பெற்றோர்கள் கூறியுள்ளனர்.
சடலங்கள் பிரேத பரிசோதனைக்காக அருகில் உள்ள மருத்துவமனைக்கு அனுப்பப்பட்டுள்ளது. அதன், அறிக்கை வந்த பிறகே நடவடிக்கை எடுக்க முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.